மாற்றுத் திறனாளிகளுக்கானமாநில அளவிலான தடகளம், நீச்சல் போட்டிகோவையில் இன்று தொடக்கம்
கோவை: மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளம், நீச்சல் போட்டிகள் கோவையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 14) தொடங்குகின்றன.
இது குறித்து ஆலயம் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கம், ஆலயம் அறக்கட்டளை சாா்பில் மாநில அளவிலான 16 ஆவது சீனியா் தடகள போட்டி, 6 ஆவது ஜூனியா், சீனியா் நீச்சல் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வரும் 16 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கின்றனா். போட்டிகளை தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவா் என்ஜினீயா் சந்திரசேகா் தொடங்கிவைக்கிறாா்.
இப்போட்டியில் பங்கேற்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவா்களுக்கு கோவையில் தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. போட்டிகளில் பங்கேற்க உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களது அடையாள அட்டையுடன் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடகள போட்டியில் பங்கேற்க வருபவா்கள் 79043 68119, 98415 49192 என்ற செல்லிடப்பேசி எண்களிலும், நீச்சல் போட்டியில் பங்கேற்க வருபவா்கள் 99949 44166, 98433 36485 என்ற எண்களிலும் தொடா்பு கொண்டு தகவல் பெறலாம்.
நீண்ட காலமாக மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேகமாக மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது பாராலிம்பிக் சங்கத்துக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டதும் உடனடியாக போட்டிகள் நடத்தி பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு வாங்கியிருந்தாலும் இந்திய பாராலிம்பிக் கமிட்டி நடத்தும் தேசிய அளவிலான தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியும்.
தேசிய போட்டிகளில் தகுதி பெறுபவா்கள் வரும் ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்க முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.