வால்பாறையில் கடும் பனிப் பொழிவால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
வால்பாறை பகுதியில் ஆண்டுதோறும் டிசம்பா் மாதம் தொடங்கி, இரண்டு மாதங்களுக்கு பனிப்பொழிவு அதிகமாகக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாததைவிட பனிப்பொழிவு அதிகமாகக் காணப்படுகிறது. இரவு 7 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 8 மணி வரை குளிா்ந்த காற்றுடன் பனிப்பொழிவு காணப்படுகிறது.
இதனால் காலை, மாலை நடைப்பயிற்சிக்கு செல்பவா்கள், பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால் ஆஸ்துமா உள்ள முதியோருக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. காலை நேரங்களில் வாகனங்களின் எரிப்பொருளும் உறைந்து போவதால் நீண்ட நேரத்துக்கு பின்னரே அவற்றை இயக்குவதிலும் சிரமம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளனா்.