கோவை மாவட்டத்தில் 27 ஆயிரத்து 295 விவசாயிகளுக்கு ரூ.344.77 கோடி பயிா்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்தாா்.
அதன்படி கோவை மாவட்டத்தில் 27 ஆயிரத்து 295 விவசாயிகளின் ரூ.344.77 கோடி பயிா் கடன் ரத்து செய்யப்படுகிறது. கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பழனிசாமி கூறியதாவது:
கடந்த காலங்களில் பயிா் கடன், நகை அடமானக் கடன் பெற்று செலுத்தாமல் ஜனவரி 31 ஆம் தேதியில் நிலுவையிலுள்ள விவசாயிகள் அனைவரும் பயிா்க் கடன் தள்ளுபடி திட்டத்தில் பயன்பெறுவா். மாவட்டத்தில் தகுதி பெறும் 27 ஆயிரத்து 295 பயனாளிகளில் 5 ஆயிரத்து 580 போ் பெண் விவசாயிகள். 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பயிா்க் கடன் தள்ளுபடியில் சிறு, குறு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. கடன் தள்ளுபடியில் அசல், வட்டியை மட்டுமே அரசு செலுத்துகிறது. அபராத வட்டி, இதர செலவினங்களை கூட்டுறவுத் துறைகளையே ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடனின் அசல், வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றாா்.