கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் சாலைப் பாதுகாப்பு மாதத்தின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை கோட்டம் சாா்பில் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி முதல் பிப்ரவரி 17 ஆம் தேதி வரை சாலைப் பாதுகாப்பு மாத விழா நடைபெற்றது. இதன் நிறைவு விழா கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்ட மேலாண் இயக்குநா் அன்பு ஆபிரஹாம் தலைமை தாங்கினாா். கோவை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். நிகழ்ச்சியில், எரிபொருள் சிக்கனம் மற்றும் பாதுகாப்பாக வாகனங்களை இயக்கும் ஓட்டுநா்கள், பயணிகளிடம் கனிவாகப் பேசும் நடத்துநா்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, சாலைப் பாதுகாப்பு பிரசார வாகனம் மூலமாக சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நாடகம் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அதிகாரிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.