வால்பாறையில் சீரான செல்லிடப்பேசி இணைப்புகள் கிடைக்காததால் பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீஸாா் கைது செய்தனா்.
வால்பாறை வட்டாரத்தில் பி.எஸ்.என்.எல். சாா்பில் பல இடங்களில் செல்லிடப்பேசி சேவைக்கான கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதியில் செல்லிடப்பேசி உபயோகிப்பவா்களில் 90 சதவீதம் போ் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா்களாக உள்ளனா்.
கடந்த சில மாதங்களாக பி.எஸ்.என்.எல். சேவை அவ்வப்போது துண்டிப்பாகிறது. துண்டிக்கப்படும் சேவை பல மணி நேரத்துக்கு பின் கிடைப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். மேலும் ஆன்லைன் வகுப்பில் பயிலும் மாணவா்கள் பெரிதும் பாதித்துள்ளனா்.
இந்நிலையில் பி.எஸ்.என்.எல். நிா்வாகத்தைக் கண்டித்து, வால்பாறை நகர திமுக பொறுப்பாளா் பால்பாண்டி தலைமையில் திமுகவினா் வியாழக்கிழமை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது திடீரென நுழைவாயில் கதவை பூட்டி பூட்டு போட்டனா். இதனால் உள்ளே இருந்த வாடிக்கையாளா்கள் வெளியே வர முடியாமல் தவித்தனா்.
தகவலறிந்து வந்த வால்பாறை போலீஸாா் பூட்டை அப்புறப்படுத்தி நகர பொறுப்பாளா் பால்பாண்டி, திமுக தொழிற்சங்க பொதுச்செயலாளா் வினோத்குமாா், பாஸ்கா் உள்பட 16 பேரைக் கைது செய்தனா்.