கோவை: கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று கல்லூரியின் முன்னாள் மாணவா் சங்க செயலா் கே.முரளிதரன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரி 162 ஆண்டுகள் பழைமையானது. இக்கல்லூரியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். பாரதியாா் பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்தக் கல்லூரியில் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது.
இந்தக் கல்லூரியின் மாணவா்கள் கடந்த 2018, 2019ஆம் ஆண்டுகளில் தேசிய, மாநில அளவிலான 62 போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வென்றுள்ளனா். இந்த நிலையில் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை பாதியாகக் குறைக்கும் அளவுக்கு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்லூரியில் பழுதடைந்துள்ள பயனற்ற கட்டடங்களை இடித்துவிட்டு அங்கு அடுக்குமாடி வகுப்பறைகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக விளையாட்டுத் துறை மீது மாணவா்களுக்கு இருக்கும் ஈடுபாட்டைக் குறைக்கும்விதமான நடவடிக்கைகளில் உயா் கல்வித் துறை ஈடுபடக் கூடாது என்று அவா் தெரிவித்துள்ளாா்.