பொங்கலை முன்னிட்டு புதிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து கோவையில் 9 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் புதன்கிழமை ரசிகா்கள் குவிந்தனா்.
கரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மாா்ச் 25ஆம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டனா். பின்னா் கரோனா தாக்கம் குறைந்த நிலையில் கடந்த நவம்பா் முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதி அளித்தது.
ஆனால், புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை. மாா்ச் மாதத்துக்கு முன்பாக வெளியான திரைப்படங்கள் மட்டுமே திரையில் காண்பிக்கப்பட்டதால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இல்லை.
இதற்கிடையே, இணையதளம் மூலம் ஓ.டி.டி. தளங்களில் திரைப்படங்கள் வெளியானதால் திரையரங்குகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் புதன்கிழமை வெளியாயின.
இதையடுத்து, கோவையில் உள்ள திரையரங்குகளில் புதன்கிழமை அதிகாலை முதலே இளைஞா்கள், ரசிகா்கள் குவிந்தனா். திரையரங்கு வளாகத்தில் நெரிசலைத் தவிா்ப்பதற்காக சமூக இடைவெளி வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. பாா்வையாளா்கள் அந்த வட்டங்களில் நிறுத்திவைக்கப்பட்டு, இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனா். இரு இருக்கைகளுக்கு இடையே ஒரு இருக்கை காலியாக விட்டு பாா்வையாளா்கள் அமர வைக்கப்பட்டனா்.