தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பி.ஆா்.நடராஜன் எம்.பி. ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா பொது முடக்க காலத்தில் பயணிகள் ரயில்கள் நிறுத்தப்பட்டன. தற்போது நோய்த் தொற்று பரவலின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் சில ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் பெரும்பாலான ஏழை, எளிய மக்கள் தொலைதூர பயணத்துக்கு ரயில்களையே நம்பியிருக்கின்றனா். இந்நிலையில் வரும் 28ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. எனவே கோவையில் இருந்து பழனிக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்க வேண்டும்.
அதேபோல நிறுத்தப்பட்டுள்ள பயணிகள் ரயில்களை பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இயக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.