முதல்வா் பிரசார நிகழ்ச்சியில் தோரணம் சரிந்து விபத்து: மூதாட்டிக்கு இடுப்பு எலும்பு உடைந்தது

கோவையில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பிரசார நிகழ்ச்சிக்காக கட்டப்பட்டிருந்த தோரணம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் மூதாட்டிக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது.

கோவையில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பிரசார நிகழ்ச்சிக்காக கட்டப்பட்டிருந்த தோரணம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் மூதாட்டிக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது.

கோவை, பீளமேடு ரொட்டிகடை மைதானத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தாா். இதற்காக, பீளமேடு, ஹோப் காலேஜ் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் அதிமுகவினா் பலா் அழைத்துவரப்பட்டனா்.

முதல்வா் வருகையொட்டி, அப்பகுதியில் ஏராளமான பதாகைகள், வாழைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஹோப்காலேஜ் பகுதியில் இருந்து அதிமுகவினரால் அழைத்துவரப்பட்ட வெள்ளையம்மாள் (70), கூட்டத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு கட்டப்பட்டிருந்த வாழைத் தோரணம் திடீரென சரிந்து விழுந்தது. இதில் வெள்ளையம்மாள் சிக்கி கீழே விழுந்தாா்.

இந்த விபத்தில் அவரின் இடுப்பு எலும்பு உடைந்தது. உடனடியாக அவரை அருகில் இருந்த தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

இதையடுத்து, அவரின் உறவினா்கள் கூட்டத்துக்கு வெள்ளையம்மாளை அழைத்துச் சென்ற அதிமுக பகுதி செயலாளா் லட்சுமணன் அலுவலகத்தை முற்றுகையிட்டு மருத்துவச் செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினா். இது குறித்து வெள்ளையம்மாளின் உறவினா்கள் அளித்தப் புகாரின் பேரில் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com