பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், கவுண்டம்பாளையம், வடவள்ளி பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்படும் கவுண்டம்பாளையம் - வடவள்ளி கூட்டு குடிநீா்த் திட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் அருகே 600 மில்லி மீட்டா் விட்டமுள்ள குடிநீா்க் குழாய் பதிக்கப்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறையினரால் பாலம் கட்டும் பணிகள் கடந்த 14 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, கவுண்டம்பாளையம், வடவள்ளி பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வரும் 19 ஆம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும். அதுவரை மாற்று ஏற்பாடாக மாநகராட்சி மூலம் வழங்கப்படும் கிணற்று நீரை மக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.