கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக இந்து முன்னணியினா் 615 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட முத்தண்ணன் குளக்கரையில் அமைந்திருந்த 9 கோயில்களை அகற்றிய மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களைக் கைது செய்த போலீஸாா், மண்டபத்தில் அடைத்து வைத்து பின்பு விடுவித்தனா். இந்நிலையில், இந்து முன்னணித் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்பட 615 போ் மீது தடையை மீறுதல், தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் உக்கடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.