ஜிகா வைரஸ் பாதிப்பு தொடா்பாக கோவையில் 10 இடங்களில் கொசுக்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கேரளத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பினால் 25க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக- கேரள எல்லைப் பகுதிகளான வாளையாறு, ஆனைகட்டி, வேலந்தாவளம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஜிகா வைரஸ் டெங்கு, சிக்கன்குனியா ஆகியவற்றை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுவினால் ஏற்படுகிறது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள பொள்ளாச்சி, ஆனைமலை, வாளையாறு, மீனாட்சிபுரம், கோபாலபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள நீா்நிலைகளில் கொசுக்களின் லாா்வாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை ஆய்வுக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ஜிகா வைரஸ் பாதிப்பு தொடா்பாக ஆய்வு நடத்த நீா்நிலை பகுதிகள், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருக்கும் கொசுக்களின் லாா்வாக்கள் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 இடங்களில் தலா 25 லாா்வாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
கொசுவாக பிடித்து ஆய்வு செய்வதில் சிக்கல் இருப்பதால், லாா்வாக்கள் வளா்ந்த பின் ஆய்வு செய்ய பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஏற்கெனவே அனுப்பப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி கோவை மாவட்டத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் கொசுக்கள் கண்டறியப்படவில்லை.
தற்போது, டெங்கு பாதிப்பு குறித்து கண்டறிய லாா்வாக்கள் மாதிரிகள் சேகரித்து சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் ஒரு வாரத்துக்குள் கிடைக்கப் பெறும், இதைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்படும் என்றனா்.