பக்ரீத் பண்டிகையையொட்டி கோவையில் உள்ள பள்ளிவாசல்களில் புதன்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதையொட்டி, கோவை மாவட்டத்தில் உக்கடம், குனியமுத்தூா், கவுண்டம்பாளையம், துடியலூா், பெரியநாயக்கன்பாளையம், பீளமேடு, கரும்புக்கடை, வடகோவை, ரத்தினபுரி, பூ மாா்க்கெட் ஹைதா் அலி திப்பு சுல்தான் சுன்னத் ஜமாத் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் புதன்கிழமை காலை 7 மணியில் இருந்து சிறப்பு தொழுகை நடைபெற்றது.
முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் தொழுகையில் ஈடுபட்டனா்.
இதில், ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
கரோனா பரவல் காரணமாக, தொழுகை முடிந்து ஒருவருக்கொருவா் அன்பு பரிமாறும் வகையில் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. நேரில் சந்தித்து வாழ்த்துகளை மட்டுமே பரிமாறிக் கொண்டனா். பக்ரீத் தொழுகை முடிந்த பின்னா் ஆடு, மாடுகளை குா்பானி கொடுத்தனா். ஆடு தனி நபராகவும், மாடு கூட்டு குா்பானியாகவும் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டு இறைச்சியின் ஒரு பங்கை தாங்கள் வைத்துக்கொண்டனா். மற்ற இரண்டு பங்குகளை உறவினா்களுக்கும், ஏழை மக்களுக்கும் வழங்கினாா்கள்.
பொதுமுடக்கத்தின் காரணமாக கடந்த ரமலான் பண்டிகையின்போது, பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறவில்லை.
இந்நிலையில், பொதுமுடக்கத் தளா்வுக்குப் பிறகு, பக்ரீத் பண்டிகைக்கு பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டதால் முஸ்லிம்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.