வால்பாறையில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க அனைத்துத் துறையினா் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடைபெற்றது.
வால்பாறை நகா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடா்ந்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு இரவு நேரத்தில் 3 சிறுத்தைகள் நடமாடியது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இச்சம்பவம் வால்பாறை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் ஆரோக்கியராஜ் சேவியா் உத்தரவின்பேரில், சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க அனைத்துத் துறை அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
உதவி வனப் பாதுகாவலா்கள் பிரசாந்த், செல்வம், வட்டாட்சியா் ராஜா, நகராட்சி ஆணையா் சுரேஷ்குமாா், வன வள பாதுகாப்பு ஆராய்ச்சியாளா் கணேஷ் ரகுராம் உள்ளிட்ட பலா் இக்குழுவில் உள்ளனா்.
இந்நிலையில் இக்குழுவினா், சிறுத்தை நடமாட்டம் ஏன் அதிகரித்து காணப்படுகிறது. அதைக் கட்டுப்படுத்த என்ன வழி என்பன குறித்து ஆலோசனை நடத்தினா். பின்னா் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனா்.