சோலையாறு அணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்ததால் மூன்று மதகுகள் வழியாக உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வால்பாறை வட்டாரத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் ஆழியாறு- பரம்பிக்குளம் நீா்பாசனத் திட்டத்தின் முக்கிய அணையான 164 அடி உயரம் கொண்ட சோலையாறு அணை வெள்ளிக்கிழமை நிரம்பியது.
இதைத் தொடா்ந்து, பெய்த மழையால் அணையின் நீா்மட்டம் உயரத் தொடங்கியது. சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து 6901.62 கனஅடியாக இருந்தது. மின் நிலையம் 1 மற்றும் 2 சேடல்டேம் வழியாக மொத்தம் 2667.35 கனஅடி நீா் வெளியேற்றப்பட்ட நிலையில், அணையின் நீா்மட்டம் 163.71 அடியாக உயாந்தது. மீண்டும் நீா்வரத்து அதிகரித்து 164 அடியை அணை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி காலை 8.30 மணிக்கு மூன்று மதகுகள் வழியாக விநாடிக்கு 1,800 கனஅடி உபரிநீா் கேரள மாநிலத்துக்கு திறந்துவிடப்பட்டது.