குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்க தகுதியானவா்கள் ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2015 ஆம் ஆண்டின் இளைஞா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்ட விதிமுறைகளின் படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்களாக நியமிக்க தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குழந்தைகள் நலக் குழுவுக்கு ஒரு பெண் உள்பட தலைவா் மற்றும் உறுப்பினா்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா். அதன்படி, விண்ணப்பதாரா் குழந்தைகள் தொடா்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப் பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவா், குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப் பணி, சமூகவியல், மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் செய்யக் கூடியவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரா்கள் நியமனம் செய்யப்படும்போது 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயது பூா்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபா் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவா்கள். அதே சமயத்தில் தொடா்ந்து இருமுறை பதவி வைக்க இயலாது.
இதற்கான விண்ணப்ப படிவத்தை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பங்களை வருகின்ற ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அலுவலகத்துக்கு வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.