கோவை காந்தி பூங்கா ரவுண்டானாவில், ராஜராஜ சோழனுக்கு சிலை அமைக்க அனுமதி கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
கோவை மாநகா் மாவட்ட பாஜக, ஆா்.எஸ்.புரம் மண்டலத் தலைவா் ராஜரத்தினம் தலைமையில் அக்கட்சியினா் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழா்களின் பெருமையை பறைசாற்றும் விதத்தில் சோழப் பேரரசா் ராஜராஜ சோழனுக்கு கோவையில் முழு உருவச்சிலை அமைக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட சலீவன் வீதி, சுக்கிரவாா்பேட்டை மற்றும் தடாகம் சாலைகள் சந்திக்கும் பகுதியான காந்தி பூங்கா ரவுண்டானாவில் ராஜராஜ சோழனுக்கு முழு உருவச்சிலை அமைக்க அனுமதி வழங்கிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.