கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்குவதில் நிலவும் தாமதத்தைக் கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் 100 வாா்டுகளில் 4 ஆயிரத்து 500 துப்புரவுத் தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மாதம் தலா ரூ.10 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக 7 ஆம் தேதிக்குள் இவா்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
ஆனால், கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. சில வாா்டுகளில் 15ம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஊதியம் இழுத்தடித்து வழங்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
இது தொடா்பாக மாநகராட்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள், மாநகராட்சி நிா்வாகம் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களிடம் புகாா் தெரிவித்தனா். ஆனால் இந்தப் புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்து நகரின் அனைத்து வாா்டுகளிலும் தூய்மைப் பணிகளை நிறுத்தி வைத்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அருந்ததியா் முன்னேற்ற கழகத் தலைவா் மணியரசு கூறுகையில், ஊதியம் வழங்குவதில் காலதாமதம் நிலவுவதால், தொழிலாளா்கள் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கூட வாங்க முடியாமல் தவித்து வருகின்றனா்.
கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காலத்தில் உயிரை பணையம் வைத்து வேலை செய்யும் தொழிலாளா்கள் ஊதியம் வழங்காமல் ஏமாற்றப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே உடனடியாக ஊதியம் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.