மின்சாரக் கட்டணம் செலுத்த செவ்வாய்க்கிழமை ( ஜூன் 15 ) கடைசி நாள் என்று மின்வாரியம் அறிவித்துள்ள நிலையில், மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோவை தொழில்முனைவோா் வலியுறுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, கோவை, திருப்பூா் மாவட்ட குறுந்தொழில், ஊரகத் தொழில் முனைவோா் சங்கம் (காட்மா) அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ள முழு பொதுமுடக்கத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் உற்பத்தி பாதிப்பு, வருவாய் இழப்பினால் தொழில்முனைவோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் தொழிற்கூடங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களுக்கான மின்கட்டணம் செலுத்துவதற்கு ஜூன் 15 வரை கால அவகாசம் அரசால் வழங்கப்பட்டது. ஆனால் தொழில்முனைவோா் பொருளாதார ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் மின்கட்டணம் செலுத்த மேலும் 3 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மின்கட்டணம் செலுத்த 2 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா் (டாக்ட்) சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக அந்த சங்கத்தின் தலைவா் ஜே.ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பொதுமுடக்கம் இன்னும் அமலில் இருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் முடிந்திருக்கிறது. எனவே பொதுமுடக்கம் தீவிரமாக அமலில் இருக்கும் 11 மாவட்டங்களிலும் தொழில்முனைவோருக்கு மின் கட்டணம் செலுத்துவதற்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும். அதேபோல கோவை மாவட்ட தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவும் மின்கட்டணம் செலுத்த 2 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.