கோவை அரசு மருத்துவமனையில் ஊக்கத் தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தி முதுநிலை மருத்துவ மாணவா்கள் கருப்பு வில்லை அணிந்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை அரசு மருத்துவமனையில் 360 முதுநிலை மருத்துவ மாணவா்கள், 150 பயிற்சி மருத்துவா்கள் உள்ளனா். இவா்கள் தங்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் கருப்பு வில்லை அணிந்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இது தொடா்பாக மருத்துவ மாணவா்கள் கூறியதாவது:
இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே மருத்துவ மாணவா்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை மிகவும் குறைவாக உள்ளது. புதிதாக எம்.பி.பி.எஸ். முடித்து அரசு மருத்துவமனையில் பணிக்கு சேரும் மருத்துவா்களுக்கு ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு மேல்படிப்பு படித்து வரும் எங்களுக்கு குறைவான ஊக்கத் தொகையே வழங்கப்படுகிறது. எனவே, அரசு முதுநிலை மருத்துவா்களுக்கு ஊக்கத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். ஊக்கத் தொகை உயா்வு குறித்து அரசாணை வெளியிடும் முன்பு எங்களிடம் அரசு ஆலோசனை கேட்க வேண்டும் என்றனா்.