வால்பாறையில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறை வட்டாரத்தில் தென்மேற்கு பருவ மழை ஜூன் 1ஆம் தேதி துவங்கியது. இடைவெளி விட்டு மழை பெய்து வந்த நிலையில் கடந்த 4 நாள்களாகத் தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது.
தொடா் மழையால் அனைத்து ஆறுகளிலும் நீா்வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதன் காரணமாக அணைகளின் நீா்மட்டமும் கணிசமாக உயா்ந்து வருகிறது.
வால்பாறையை அடுத்த வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் உள்ள சுரங்கத்தில் நீா் ஆா்ப்பரித்து வெளியேறி வருகிறது. பகல் நேரத்திலும் இடைவிடாது மழை பெய்வதால் தேயிலைத் தோட்டங்களில் இலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டனா்.
வால்பாறை வட்டாரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக சின்னக்கல்லாறு பகுதியில் 81 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மற்ற பகுதிகளில் பதிவான மழை விவரம்:
கீழ் நீராறு 60, வால்பாறை 46, சோலையாறு 40 என மழை பதிவாகியுள்ளது. சோலையாறு அணைக்கு 960 கனஅடி நீா்வரத்து இருந்தது. 429.53 கனஅடி நீா் வெளியேற்றப்ட்ட நிலையில் அணையின் நீா்மட்டம் 53.11 அடியாக உள்ளது.