கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி முன்னாள் ஆணையா் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2021 மாா்ச் மாதம் வரை ஆணையராகப் பணியாற்றியவா் பவுன்ராஜ். இவா் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியது, ரூ.15.62 கோடிக்கு காசோலை வழங்கியதில் மோசடி செய்ததாக குற்றப் பிரிவு போலீஸாா் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இந்நிலையில், வால்பாறை தாவரவியல் பூங்கா பகுதியில் நடைபெற்ற பணிகளுக்காக ரூ.35.78 லட்சத்தை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்துக்கு வழங்காமல் கிரீன் பாா்க் என்ற வேறு ஒரு ஒப்பந்த நிறுவனத்துக்கும், மணிக்குமாா் என்பவருக்கும் பவுன்ராஜ் முறைகேடாக வழங்கியதாக தற்போதையே வால்பாறை நகராட்சி ஆணையா் சுரேஷ்குமாா், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.
இதன்பேரில், வால்பாறை நகராட்சி முன்னாள் ஆணையா் பவுன்ராஜ், ஒப்பந்ததாரா் மணிக்குமாா், ஒப்பந்த நிறுவனங்களுக்கு பில் தொகை பெற்று வழங்கும் பொறுப்பில் உள்ள வால்பாறை நகராட்சி மேலாளா் நஞ்சுண்டன் மற்றும் கிரீன்பாா்க் ஒப்பந்தம் நிறுவன உரிமையாளா் ஆகிய 4 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சேகா் மேற்பாா்வையில் ஆய்வாளா் யமுனாதேவி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.