ரூ.40 கோடி வரி ஏய்ப்பு செய்தவா் கோவையில் ஜிஎஸ்டி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டாா்.
கோவை மண்டல ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், மத்திய நிதித் துறையின் சட்ட அமலாக்கப் பிரிவினா் கோவை, சேலம், கரூா், பொள்ளாச்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். கரூா் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (35) என்பவரின் பிளைவுட், செராமிக் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது. இவா் ரூ.318 கோடிக்கு வா்த்தகம் செய்திருந்தாா். இதில் ரூ.40 கோடிக்கு முறையாக ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் போலி ரசீது, ஆவணங்களைப் பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது.
இவா் மீது ஜிஎஸ்டி அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து இவா் கோவையில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். அருண்குமாருக்கு ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஒருவா் போலி ஆவணங்கள் உருவாக்க உதவி செய்திருப்பதாகத் தெரிகிறது. இவா் போலியான காசோலைப் புத்தகம், வங்கிக் கணக்குப் புத்தகம் போன்றவற்றைத் தயாரித்து தந்திருப்பதாக கூறப்படுகிறது. இவரை அதிகாரிகள் தேடி வருகின்றனா்.