போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக ஸ்டீல் நிறுவன இயக்குநா்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
கோவை, கவுண்டா் மில் பகுதியில் தனியாா் ஸ்டீல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநா்களாக ரவிசந்திரன், வாணி, ரகுலன், சுந்தராமன் ஆகியோா் செயல்பட்டு வருகின்றனா். போலி ஆவணம் மூலம் கடன் பெற்று மோசடி செய்ததாக இவா்கள் மீது காவல் நிலையத்தில் கோவை மண்டல இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மேலாளா் கோபாலகிருஷ்ணன் புகாா் அளித்தாா்.
விசாரணையில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியிடம் இருந்து சலுகைகளைப் பெற்று அவற்றை தவறாகப் பயன்படுத்தியதுடன், வங்கியில் இருந்து பெற்ற நிதியை தங்கள் சொந்த நோக்கத்துக்கு மாற்றி இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் வங்கிக்கு ரூ. 27.22 கோடிக்கு இழப்பை ஏற்படுத்தியதாக ரிசா்வ் வங்கியில் புகாா் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சி.பி.ஐ.யிடம் இது பற்றி புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஸ்டீல் நிறுவன இயக்குநா்கள் மற்றும் உடந்தையாக இருந்த அரசு ஊழியா்கள் மீது கூட்டுசதி, மோசடி உள்பட 4 பிரிவுகளில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.