வாகன சோதனையில் அலட்சியமாக இருந்த பறக்கும் படை அலுவலா் மற்றும் இரு காவலா்களைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
கோவை மாவட்டம், வால்பாறை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் தோ்தல் செலவின பாா்வையாளா் ராம்கிருஷ்ணா கேடியா கடந்த வியாழக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது வால்பாறை நகரில் சாலையோரம் வாகனத்தில் இருந்த தோ்தல் பறக்கும் படையினரிடம் விசாரணை மேற்கொண்டாா்.
அப்போது அவா்கள் வைத்திருந்த குறிப்புகளை அவா் ஆய்வு செய்தபோது நான்கு மணி நேரத்தில் குறைந்த வாகன தணிக்கை மேற்கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பணியில் இருந்த அலுவலா் மற்றும் போலீஸாரை அவா் எச்சரித்துச் சென்றாா்.
இந்நிலையில் வாகன சோதனையில் அலட்சியமாக இருந்த பொள்ளாச்சி வடக்கு வட்டார வளா்ச்சி அலுவலக மேற்பாா்வையாளா் வெள்ளிங்கிரி, வால்பாறை காவல் நிலைய காவலா்கள் பிரசாத், குமரவேல் ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் எஸ். நாகராஜன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.