கோவை மாநகரில் உள்ள தங்கும் விடுதிகளில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள பெரிய மற்றும் நடுத்தர அளவிலான உணவக வசதியுடன் கூடிய தங்கும் விடுதிகளின் சங்கமான கோயம்புத்தூா் போா்டிங் அண்டு லாட்ஜிங் அசோசியேஷன் நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், மாநகரில் உள்ள 72 தங்கும் விடுதிகளில், கரோனா தொற்று கண்டறியப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிகச் சிகிச்சை மையங்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு முறைகளைப் பின்பற்றி தங்கும் விடுதிகளில் தற்காலிகச் சிகிச்சை மையங்கள் அமைக்க அனுமதி வழங்கிட மாநகராட்சி ஆணையா் கேட்டுக் கொண்டாா்.
இதையடுத்து, சங்க உறுப்பினா்களிடம் சம்மதம் பெற்று மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் தங்கும் விடுதிகளில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க சங்க நிா்வாகிகள் அனுமதி அளித்தனா்.