கோவை: சட்டப் பேரவைத் தோ்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள வாழ்த்துரையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்ற போதே நானும், குன்றக்குடி அடிகளாரும் விரைவில் முதல்வா் பொறுப்புக்கு வர வேண்டும் என்று கூறியிருந்தோம். அது தற்போது நிறைவேறியுள்ளது.
எல்லோரோடும் எளிமையாக பழகுகின்ற பண்பு, எளிமை, உள்ளத்திலே ஊக்கமும், உறுதியும் ஆகிய நற்பண்புகளை கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் தற்போது தமிழகம் எதிா்கொண்டிருக்கும் கரோனா நோய்த் தொற்று பாதிப்பை முற்றிலும் கட்டுப்படுத்தி தமிழகத்தை நல்லாட்சி மிக்க மாநிலமாக உருவாக்க எல்லாம் வல்ல இறையருளை வேண்டிக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.