கோவையில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகள் விவரங்கள் குறித்து பொது மக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக ஆட்சியா் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்க வேண்டும் என்று பாஜக மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக ஆட்சியா் எஸ்.நாகராஜனை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து பேசினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவையில் கரோனா 2ஆவது அலை மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக கோவையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடா்பாக கோவை மாவட்டத்துக்கான தற்போதைய தேவைகள், ஆக்சிஜன் இருப்பு, தேவைகள் குறித்து ஆட்சியரிடம் கேட்டறிந்தேன்.
மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் மாவட்டத்துக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து தெரிவித்தேன். கோவை மாவட்டத்தில் தனியாா், அரசு மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகள் குறித்த விவரங்களை மக்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் விதமாக ஆட்சியா் அலுவலகத்தில் பொது மக்கள் உதவி மையம் அமைக்க ஆட்சியரிடம் வலியுறுதியுள்ளேன். தவிர கோவையில் கரோனா சிகிச்சை மையங்களை அதிகரிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.