கோவை கரும்புக்கடை அருகே உள்ள பழைமையான கட்டடம் செவ்வாய்க்கிழமை காலை இடிந்து விழுந்தது.
கோவை மாநகரப் பகுதிகளில் அபாய நிலையில் உள்ள அனைத்துக் கட்டடங்களையும் இடித்து அகற்ற மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை கரும்புக்கடை அருகே உள்ள சாரமேடு சாலையில் இடியும் நிலையில் இருந்த கட்டடத்தின் உரிமையாளருக்கு சில மாதங்களுக்கு முன்பு கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்துமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆயினும், அந்தக் கட்டடம் இடிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 3 மணிக்கு அந்தக் கட்டடம் இடிந்து விழுந்தது. கட்டடம் மற்றும் அப்பகுதியில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.