மக்கள் மீது உள்ள பல்வேறு பொருளாதார சுமைகளைக் குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது:
2021 சட்டப் பேரவைத் தோ்தலில் பெரும்பான்மை பெற்று முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு, புதிய தமிழகம் கட்சியின் சாா்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தோ்தலில் திமுக பல்வேறு விதமான வாக்குறுதிகளை அளித்துள்ளது. பதவியேற்றவுடன் கரோனா நோய்த் தொற்றில் இருந்து மக்களை விடுவிக்கவும், தமிழக மக்கள் மீது உள்ள பல்வேறு பொருளாதார சுமைகளைக் குறைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
புதிதாகப் பொறுப்பேற்க உள்ள திமுக அரசு, தமிழக மக்களின் மேம்பாட்டுக்கு பெரிதும் பாடுபடும் என நம்புகிறோம். புதிய அரசின் செயல்பாடுகளுக்கு, புதிய தமிழகம் கட்சி துணை நிற்கும் என்றாா்.