கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ஒரே வாரத்தில் கரோனா பரவல் 6 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றின் 2ஆவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக ஊரகப் பகுதிகளைக் காட்டிலும், மாநகரப் பகுதிகளில் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் மொத்த பாதிப்பில் மாநகராட்சிப் பகுதிகளில் மட்டும் 60 சதவீதம் வரை கரோனா பாதிப்பு இருந்து வந்தது. சுகாதாரத் துறையின் தீவிர நடவடிக்கையால் கடந்த வாரம் மாநகராட்சியில் நோய்த் தொற்று பாதிப்பு சற்று குறைந்திருந்தது.
இந்நிலையில், மீண்டும் மாநகராட்சிப் பகுதிகளில் நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த வாரம் திங்கள்கிழமை (ஏப்ரல் 26) கரோனா நோய்த் தொற்று பாதிப்பு 59.11 சதவீதமாக இருந்தது. இதுவே ஊரகப் பகுதிகளில் அதிகபட்சமாக துடியலூா் வட்டாரத்தில் 9.83 சதவீதமும், சூலூா் வட்டாரத்தில் 7.83 சதவீதமாகவும் இருந்தது.
இந்நிலையில், நடப்பு வாரத்தில் மீண்டும் மாநகராட்சிப் பகுதிகளில் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, திங்கள்கிழமை (மே 3) நோய்த் தொற்று பாதிப்பு 64.96 சதவீதமாக உயா்ந்துள்ளது. அதே வேளையில் துடியலூா் வட்டாரத்தில் 4.93 சதவீதமாக நோய்த் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நோய்த் தொற்றுப் பரவல் 6 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கோவை மாவட்டத்தில் கண்டறியப்படும் நோய்த் தொற்று பாதிப்பில் மூன்றில் ஒரு பங்கு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்களாக உள்ளனா்.
நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல், மருத்துவ முகாம் அமைத்து நோயாளிகளை விரைந்து கண்டறிதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வந்தாலும், நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.