கோவையில் யானைகள் வழித் தடத்தில் இல்லாத செங்கல் சூளைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா் நடராஜன், கோவை திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் சி.ஆா்.ராமச்சந்திரன், செங்கல் சூளை உரிமையாளா்கள் ஆட்சியா் எஸ்.நகராஜனை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.
பின்னா் பி.ஆா்.நடராஜன் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவை மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாதவாறு போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலா் முருகானந்தம், சுகாதாரத் துறை செயலாளா் ஆகியோரிடம் ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது என தகவல்கள் வருகின்றன. இதனைத் தவிா்க்கும் அளவுக்கு ஆக்சிஜன்களை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளை விவகாரத்தில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி மாவட்ட நிா்வாகம் செயல்பட வேண்டும். 30 நாள்கள் அவகாசத்தில் யானைகள் வழித்தடம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அவ்வழியாக உள்ள செங்கல் சூளைகள் இயங்க அனுமதிக்காமல், பிற செங்கல் சூளைகளை நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி இயங்க அனுமதிக்க வேண்டும் என்றாா்.