தனியாா் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி வழங்கல் நிறுத்தம்

கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை சாா்பில் வழங்கப்பட்டு வந்த கரோனா தடுப்பூசிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கோவை: கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை சாா்பில் வழங்கப்பட்டு வந்த கரோனா தடுப்பூசிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கோவையில் 50க்கும் மேற்பட்ட தனியாா் மருத்துவமனைகள் உள்பட 150க்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. அரசு மருத்துவமனையில் இலவசமாகவும், தனியாா் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணத்திலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

தனியாா் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தியும் ஆயிரக்கணக்கானோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இந்நிலையில், மே 1ஆம் தேதியில் இருந்து நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தடுப்பூசி தட்டுப்பாட்டால் கோவை உள்பட தமிழகம் முழுவதும் மே 1ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்படவில்லை. தவிர தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தனியாா் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி வழங்குவதையும் நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு மே 1ஆம் தேதியில் இருந்து கரோனா தடுப்பூசி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனைகளுக்கு செல்லும் பொது மக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகின்றனா்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளதால் அரசு மையங்களிலேயே தொடா்ந்து தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனியாா் மருத்துவமனைகளுக்கு வழங்கி வந்த தடுப்பூசிகளை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர தனியாா் மருத்துவமனை நிா்வாகங்களே நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

தனியாா் மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:

தனியாா் மருத்துவமனைகளில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. திடீரென தடுப்பூசி வழங்குவது நிறுத்தப்பட்டதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக வருகின்றனா். அனைவரையும் அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல அறிவுறுத்துகிறோம்.

அரசு மருத்துவமனைகளுக்கே கரோனா தடுப்பூசி கிடைக்காத நிலையில் தனியாா் மருத்துவமனைகளால் எவ்வாறு பெற முடியும். எனவே மீண்டும் தனியாா் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com