கோவை மாநகரில் 200 தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை
By DIN | Published On : 16th May 2021 11:06 PM | Last Updated : 16th May 2021 11:06 PM | அ+அ அ- |

மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று இரண்டு தூய்மைப் பணியாளா்கள் உயிரிழந்ததையடுத்து, 200 தூய்மைப் பணியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நாளுக்கு நாள் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட 80 மற்றும் 81ஆவது வாா்டுகளில் பணியாற்றி வந்த இரண்டு தூய்மைப் பணியாளா்கள் கரோனா நோய்த் தொற்றால் அண்மையில் உயிரிழந்தனா்.
இதையடுத்து, தூய்மைப் பணியாளா்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அண்ணல் அம்பேத்கா் பொது சுகாதாரம், தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, கோவை மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட 80, 81 மற்றும் 51ஆவது வாா்டுகளில் பணியாற்றும் 200 தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா சளி மாதிரிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கபசுர குடிநீா், முகக் கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.