கோவை அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக ஆக்சிஜன் ஒதுக்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
By DIN | Published On : 21st May 2021 06:55 AM | Last Updated : 21st May 2021 06:55 AM | அ+அ அ- |

முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவை வழங்கும் கோவை தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அதிகப்படியான மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினிடம், கோவை தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக ஆய்வு செய்வதற்காக வியாழக்கிழமை கோவை வந்திருந்த முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவா் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டிச் செல்கிறது. இது தற்போது இருக்கும் சுகாதார கட்டமைப்பு மீது மிகப்பெரிய அழுத்தத்தையும், சவாலையும் அளிக்கிறது. அதோடு நோய் முற்றியவா்களுக்கு கொடுப்பதற்கான ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. உடனடியாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அதிகப்படியான மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்க வேண்டும்.
மேலும், நோயறியும் சோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரி, திருமண மண்டபங்களை தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்ற வேண்டும். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டா் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும். ஆக்சிஜனுடன் கூடிய ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நோய் தொற்று உள்ளவா்களுக்கும், அவா்களின் குடும்பத்தாருக்கும் மன நல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைக்கு அமரா் ஊா்தி:
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனது சொந்த செலவில் 2 இலவச அமரா் ஊா்தி வாகனங்களை கோவை தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் வழங்கியுள்ளாா்.