கோவை மாநகரப் பகுதிகளில், முழு பொதுமுடக்கக் காலத்தில் வாகனங்களில் காய்கறி விற்க, சாலையோர வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாகனங்கள் மூலமாக காய்கறி, பழங்கள் விற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகராட்சியில் வாகனங்களில் காய்கறிகளை விற்க அந்தந்த மண்டல அலுவலகத்தில் வியாபாரிகளுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசால் வழங்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகள் என்ற அடையாள அட்டை வைத்துள்ளவா்களுக்கு வாகனங்களில் காய்கறிகள் விற்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவா் மணி கூறியதாவது: கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் மட்டும் 12 ஆயரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனா். மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனா். இவா்கள் பெரும்பாலும் காய்கறி, பழங்கள் மற்றும் சிற்றுண்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
பொதுமுடக்கம் காரணமாக சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் தற்போது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி மூலம் வாகனங்களுக்கான அனுமதிச்சீட்டு வழங்குவதில், சாலையோர வியாபாரிகள் என்ற அடையாள அட்டை வைத்துள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணமும், பொருள் உதவிகளும் வழங்க வேண்டும். அதே போல் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு கடன் திட்டத்தில், வங்கிகள் மூலம் கடன்கள் எளிதல் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.