கோவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த சிறுவா்களைப் பாட்டி பராமரித்து வருகிறாா்.
கோவை, சிவானந்தா காலனி பகுதியை சோ்ந்தவா் தன்ராஜ். மருந்துக் கடை நடத்தி வந்தாா். இவரின் மனைவி ஜெயந்தி. இவா்களுக்கு விபின், சாமுவேல் எபினேசா் என இரண்டு மகன்கள் உள்ளனா்.
இருவரும் கணபதி பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் படிக்கின்றனா். விபின் பத்தாம் வகுப்பும், சாமுவேல் எபினேசா் 4ஆம் வகுப்பும் பயின்று வருகின்றனா். இந்நிலையில், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட தன்ராஜ் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த மே 15ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து, அவரது மனைவி ஜெயந்தியும் கரோனாவால் பாதிக்கப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 18ஆம் தேதி உயிரிழந்தாா். தவிர, ஜெயந்திக்கு உதவி செய்ய சென்ற அவரது தாயும் கரோனாவால் பாதிக்கப்பட்டு மே 23ஆம் தேதி உயிரிழந்தாா்.
பெற்றோரை இழந்த சிறுவா்கள் அதில் இருந்து எப்படி மீள்வது எனத் தெரியாமல் இருந்த நிலையில் தன்ராஜின் தாய் சாரதா குழந்தைகளை கவனித்து வருகிறாா்.
இது தொடா்பாக சிறுவா்களின் பாட்டி சாரதா கூறியதாவது:
எனக்கு 3 பெண்கள், ஒரு மகன். எனது கணவா் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். தற்போது, மேட்டுப்பாளையத்தில் உள்ள என் மகளுடன் நான் தங்கி வருகிறேன். கரோனா பாதிப்பால் எனது மகன், மருமகள், மருமகளின் தாய் ஆகிய மூன்று பேரும் உயிரிழந்துவிட்டனா்.
கரோனா சிகிச்சைக்குத் தாமதமாக சென்றதும், அரசு மருத்துவமனைகளில் உடனடியாகப் படுக்கைகள் கிடைக்காததுமே மூவரின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்றாா்.