கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் வெள்ளிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
தமிழக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் கோவை முதலிடத்தில் உள்ளது. தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதன் காரணமாக அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 839 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் உள்ளன. இதில் அரசு மருத்துவமனையில் 700 படுக்கைகளும், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 450 படுக்கைகளும் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன. இந்தப் படுக்கைகள் முழுவதும் நிரம்பியதால், புதிதாக வரும் நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட மையம் அமைக்கப்பட்டது. இதன் பணிகள் நிறைவடைந்து வெள்ளிக்கிழமை முதல் இந்த மையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவையில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு நிலவும் தட்டுப்பாட்டைக் குறைக்கும் நோக்கில் ஆக்சிஜன் வசதி கொண்ட 200 படுக்கைகளுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 2 மருத்துவா்கள், 4 செவிலியா்கள் பணியில் இருப்பா். தற்போது வரை 18 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.