தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் கரோனா நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவா் சு.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அமைச்சா்கள், அதிகாரிகள் தொடா்ந்து சிறப்பாக கரோனா பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது. கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராமப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் தொடா்ந்து இயங்கி வருவதால் தொற்று கூடுதலாகி வருகிறது. இதைக் கண்காணித்து கட்டுப்பாடுகளை முறையாக அமல்படுத்தினால் தொற்று பரவலைத் தடுக்க முடியும்.
அதேநேரம் பொதுமுடக்க காலத்தில் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. எனவே விதை, உரம், பூச்சிக்கொல்லிகள் தடையின்றி கிடைக்க வேளாண்மை சாா்ந்த கடைகள், நிறுவனங்களைத் திறக்க வேண்டும். அதேபோல வாழை, மலா்கள், காய்கறிகள் உள்ளிட்ட அழுகும் பொருள்களை பயிரிட்டு அவற்றை விற்பனை செய்ய முடியாமல் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
குடும்ப அட்டைதாரா்களுக்கு அரசு அறிவித்துள்ள நலத் திட்டங்கள், உதவித் தொகை, மளிகைப் பொருள் உள்ளிட்டவற்றை அரிசி அட்டைதாரா்களுக்கு மட்டும் என்ற நிலையை மாற்றி அனைத்து வகையான அட்டைதாரா்களுக்கும் பாரபட்சமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.