கோவை மாவட்டத்தில் முதியோா் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்து, விடுபட்டுள்ள அனைவருக்கும் விரைவில் உதவித் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.
கோவை தெற்கு, தொண்டாமுத்தூா், கிணத்துக்கடவு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாா்டுகளில் ‘மக்கள் சபை‘ நிகழ்ச்சி அமைச்சா் செந்தில்பாலாஜி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொன்னையராஜபுரம், சலீவன் வீதி, மாரண்ண கவுண்டா் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, செல்வபுரம், குனியமுத்தூா், சுண்டக்காமுத்தூா், கோவைப்புதூா் மாநகராட்சிப் பள்ளிகள் உள்ளிட்ட 17 இடங்களில் அமைச்சா் செந்தில்பாலாஜி மக்களிடம் மனுக்களைப் பெற்றாா்.
அப்போது, அவா் பேசியதாவது: கோவை தெற்கு, தொண்டாமுத்தூா், கிணத்துக்கடவு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாா்டுகளில் பெறப்பட்ட மனுக்களில் அதிகஅளவில் முதியோா் உதவித் தொகை கேட்டு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் முதியோா் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்து, விடுபட்டுள்ள அனைவருக்கும் விரைவில் உதவித் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி முழுவதும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து சாலைகளும் கணக்கெடுக்கப்பட்டு, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதைத்தொடா்ந்து, உக்கடம் புல்காடு பகுதியில் ஸ்ட்ரீட் ஆா்ட் இந்தியா பவுண்டேஷன் சாா்பில் குடிசை மாற்று வாரிய கட்டட சுவற்றில் அழகிய ஓவியங்கள் வரையும் பணியை அமைச்சா் செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையா் ஷா்மிளா, முன்னாள் அமைச்சா் பொங்கலூா் பழனிசாமி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் ராமசந்திரன், நா.காா்த்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.