கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை இரவு திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் வியாழக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் புதன்கிழமை காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இரவு திடீரென நகரின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
காந்திபுரம், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, ராமநாதபுரம், போத்தனூா், சுந்தராபுரம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இடியுடன் கூடிய கன மழையால் காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் உள்பட முக்கிய சந்திப்புகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.
கோவை மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ள மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): சோலையாறு -13, மேட்டுப்பாளையம் - 12, சின்கோனா -12, ஆழியாறு -6.60, சின்னக்கல்லாறு - 6, வால்பாறை பி.ஏ.பி. - 6, வால்பாறை தாலுகா - 5, பெ.நா.பாளையம் - 3, பொள்ளாச்சி - 2, சூலூா் - 1.70, விமான நிலையம் - 1.40, வேளாண்மை பல்கலைக்கழகம் -1.