சென்னைக்கு நிகராக கோவைக்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவையில் ரூ. 89.73 கோடி மதிப்பில் 128 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
இதையும் படிக்க- ஏர்டெல் ப்ரிபெய்ட் கட்டணம் உயர்வு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் பெருவாரியான வெற்றி கிடைத்தது. கோவையில் எதிர்பார்த்த வெற்றி திமுகவுக்கு கிடைக்கவில்லை. அனைத்து மாவட்ட மக்களும் என் மக்கள் தான் என்ற வகையில் பணியாற்றுகிறேன்.
கோவை மாவட்ட வளர்ச்சிக்காக அரசின் பணிகளை கவனிக்க அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்தேன். சென்னைக்கு நிகராக கோவைக்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். கோவை நகருக்குள் செயல்படும் சிறைச்சாலையை நகருக்கு வெளியே மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிகம் பேச மாட்டேன், செயலில் காட்டுவேன். கோவையை தலைசிறந்த மாவட்டமாக்க ஆயத்தமாகிவிட்டோம் என்றார்.