கோவையில் பாலியல் தொல்லை காரணமாக, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 17 வயது பள்ளி மாணவி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக, காவல்துறையினர், போக்சோ வழக்குப்பதிவு செய்து, தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிக்க | டிசம்பர் 1-இல் அதிமுக செயற் குழுக் கூட்டம்
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி ஜி.குலசேகரன், பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கையெழுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடை 30 நாள்களுக்குள் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவலர்கள் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.