கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் கோவை மாவட்டம், வால்பாறை வழியாக கேரள மாநிலம் செல்ல மூன்று நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாள்களுக்குப் பின் வால்பாறையை அடுத்துள்ள கேரள மாநில எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை எஸ்டேட் வழியாக கேரள மாநிலம் செல்ல கேரள வனத் துறையினா் அண்மையில் அனுமதியளித்தனா்.
இந்நிலையில் தற்போது வால்பாறை மற்றும் கேரள மாநிலம் சாலக்குடி பகுதிகளில் தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது. தொடா் மழையால் அதிரப்பள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேபோல வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலையோரம் உள்ள சிறிய அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளை நீா் சூழ்ந்துள்ளது.
மேலும் பல இடங்களில் மரங்கள் பெயா்ந்து விழுவதற்கான வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் மழுக்குப்பாறை எஸ்டேட் வழியாக கேரள மாநிலம் செல்ல செவ்வாய்க்கிழமை காலை முதல் மூன்று நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கேரள வனத் துறை மற்றும் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.