கோவை உக்கடம் ஜி.எம். நகரில் குவிந்துள்ள குப்பைகளால் சுகாதாரச் சீா் கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனா்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 74 ஆவது வாா்டு பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள ஜி. எம். நகா் பகுதியில் குப்பைகள், இறைச்சிக் கழிவுகள், நெகிழிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை பொதுவெளியில் கொட்டிச் செல்வதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
இதனால், இப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: மலைபோல குவிந்துள்ள குப்பைகளால் இப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. இங்கு கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளை உண்பதற்காக நாய்கள் அதிகஅளவில் இப்பகுதியில் சுற்றுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
குப்பைகளை அகற்றகோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகாா் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இப்பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.