கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு போனஸ் வழங்க வலியுறுத்தி மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கராவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மாநில தாழ்த்தப்பட்டோா் நல வாரிய உறுப்பினா் செல்வகுமாா், ஆதித்தமிழா் பேரவை மாநில பொதுச் செயலாளா் ரவிகுமாா் ஆகியோா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
கோவையில் கரோனா நோய்த் தொற்று காலத்திலும் மிகச் சிறப்பாக தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.
கடந்த ஆண்டு தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.2,500 போனஸ் வழங்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் தூய்மைப் பணியாளா்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்.
போனஸ் தொகையை இருமடங்காக உயா்த்தி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.