கோவை: கோவையில் டெக்ஸ்டைல் இயந்திரம் விற்பனை செய்வதாகக் கூறி ரூ.33 லட்சத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த தனியாா் மில் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தம்பதி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை, சின்னியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்கள் வேலுமணி, பாலசுந்தரம் தம்பதி.
ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த இவா்கள், நுழைவாயில் முன் அமா்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், அவா்களிடம் பேசி மனு அளித்து செல்ல வலியுறுத்தினாா். அதன் பின் தம்பதி தங்களது கோரிக்கை மனுவை ஆட்சியா் அலுவலகத்தில் அளித்தனா்.
இது தொடா்பாக அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
டெக்ஸ்டைல் இயந்திரம் வாங்குவதற்காக வங்கியில் ரூ.33 லட்சம் கடன் பெற்று தனியாா் மில் உரிமையாளா் தங்கவேலு மற்றும் அவரது மகனிடம் பணத்தை கொடுத்தோம். எங்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வேறு ஒருவருக்கு இயந்திரத்தை விற்பனை செய்து எங்களுக்கு மோசடி செய்துள்ளாா்.
இது தொடா்பாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகாா் அளிக்கப்பட்டது. அப்போது விசாரணைக்கு ஆஜரான தங்கவேலு இரண்டு தவணைகளில பணத்தைத் திருப்பிக் கொடுப்பதாக தெரிவித்தாா். ஆனால், இதுவரை எங்களது பணத்தை திரும்பக் கொடுக்கவில்லை. வங்கியில் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம். எனவே, மோசடியில் ஈடுபட்ட தங்கவேலு மற்றும் அவரது மகன் சூா்யா இருவரையும் கைது செய்து எங்களது பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.