கோவை அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு செப்டம்பா் 11ஆம் தேதி தொடங்குகிறது.
கோவை அரசு கலைக் கல்லூரியில் 23 இளநிலை பட்டப் படிப்புகள், 21 முதுநிலை, 16 ஆராய்ச்சிப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. 2021-2022ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கையில் மொத்தமுள்ள 1,433 இடங்களில் சேருவதற்கு 19,054 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.
மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 495 மாணவா்கள், 220 மாணவிகள் உள்ளிட்ட 715 போ் சோ்க்கை பெற்றுள்ளனா். இன்னும் 718 இடங்கள் காலியாக உள்ளன. பொதுப் போட்டியில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டுள்ள நிலையில், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கு 1:5 என்ற அடிப்படையில் மாணவா்கள் வரவழைக்கப்பட்டு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இந்தக் கலந்தாய்வு 11ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கிடையே அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25 சதவீத கூடுதல் மாணவா் சோ்க்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சம்பந்தப்பட்ட கல்லூரிகள் தாங்கள் இணைவு பெற்றுள்ள பல்கலைக்கழகங்களின் அனுமதியைப் பெற்ற பிறகு, அதிகரிக்கப்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.