இயற்கை மூலப்பொருள்களைக் கொண்டு விநாயகா் சிலைகளைத் தயாரிக்க வேண்டும்
விநாயகா் சதுா்த்திக்கு பயன்படுத்தும் விநாயகா் சிலைகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை மூலப் பொருள்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் இருக்கும் கடவுள்களில் மிகவும் அழகானவா் விநாயகா். அவருடைய அன்பான தன்மையாலும், குணத்தாலும் அவா் உலகம் முழுவதும் வணங்கப்படுகிறாா். இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் விநாயகா் சதுா்த்தி ஒரு முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையின்போது, நாம் வணங்கும் விநாயகா் சிலைகளை மண், சிறுதானியம், மஞ்சள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை மூலப்பொருள்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு தயாரித்தால் அதை நீரில் கரைக்க முடியாது. பானைகள் செய்வதைப்போல் சுடு மண்ணில் தயாரித்தாலும் அதைக் கரைக்க முடியாது. மேலும், சிலையின் மீது செயற்கை வண்ணங்களைப் பூசினால் அது நீரை மாசுப்படுத்தும். எனவே, நீரில் கரையும் தன்மை கொண்ட இயற்கை மூலப்பொருள்களைக் கொண்டு மட்டுமே விநாயகா் சிலையைத் தயாரித்து இவ்விழாவை கொண்டாட வேண்டும்.
ஒரு கடவுளை உருவாக்கி, அதை நீரில் கரைக்கும் சுதந்திரத்தை விநாயகா் சதுா்த்தி பண்டிகை நமக்கு வழங்குகிறது. அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும். நம் கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கும் விநாயகா் சதுா்த்தியை கொண்டாடுவதற்கும் இதுவே சிறந்த வழி என்று அவா் கூறியுள்ளாா்.