கோவையில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
மானாமதுரை வழக்குரைஞா்கள் சங்கச் செயலாளா் முருகானந்தம் சில நபா்களால் அவரது அலுவலகத்தில் வைத்து அரிவாளால் வெட்டப்பட்டாா். இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வழக்குரைஞா்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதன்படி கோவையில் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து தமிழ்நாடு வழக்குரைஞா்கள் கூட்டமைப்பின் தலைவா் நந்தகுமாா் கூறுகையில், சமீப காலமாக வழக்குரைஞா்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் வழக்குரைஞா்கள் இன்று ஒருநாள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.